Friday, 4 January 2019

தொடுவானம் 2


மூன்று மாதம் கழித்து அடுத்த ஸ்கேன் செய்ய வேண்டும், அப்போது வந்தால் போதும் என்று கூறி சில பல மாத்திரைகளை இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து என்றெல்லாம் கூறி எழுதி கொடுத்திருந்தார் பாலா. எல்லாவற்றையும் வாங்கிவிட்டு வீட்டிக்கு வந்து முதல் வேலையாக எல்லா சாமியையும் மனதார தன் பிள்ளைக்கு துணை இருக்க சொல்லி அடுத்த வேலை பார்க்க போனாள் ராஜீ.
யாரோடும் இன்னும் சொல்லவில்லை,,, சின்ன குட்டி வரப்போகிறாள் என. ஒரு வித பதற்றமும், பயமும் கூடவே இருக்கிறது. என்ன செய்யலாம் .. அம்மாவுக்கு சொல்வோம் ,,,, என்று போனை எடுத்து அடுத்த தெருவில் இருக்கும் அம்மாவுக்கு அழைத்தாள்.
சொல்லுமா” ,,, ஹலோ .... எப்படி, என்ன எங்கு ஆரம்பிப்பது என்று தெரியாது ,,, அந்த மௌனத்தின் ஊடே “நம்ம வீட்டுக்கு பாப்பா வரபோரா “ என்று மட்டும் கூறிவிட்டு அமைதி காத்தாள். எத்தன நாள் ஆச்சு? டாக்டர் கிட்ட போனியா ? என்று கேள்விகளால் துளைத்து விட்ட பிறகு ... அப்பகிட்ட சொல்றேன், சாயங்காலமா வரேன் என்று போனை வைத்தார். வேறு யாரிடம் சொல்வது .. சித்தியையும் அழைத்து அதையே சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டாள்.
சில நாட்கள் கழித்து அவர்களின் வாழ்வில் வரவிருக்கும் அந்த குட்டி புயல், வேலையை காட்ட துவங்கியது. உலை கொதிக்கும் வாசம் முதல், பால், என்று எல்லாவற்றிற்கும் வாந்தி எடுக்க வைத்தாள். மணிகணக்கில் சிங்கின் முன்னே அமர்ந்து கிடந்தாள் ராஜீ. இதற்கிடையில் கல்லூரிக்கும் வேலைக்கு சென்றுக்கொண்டிருந்தாள்.
கல்லூரியில் மட்டும் இந்த சின்ன குட்டி சமத்தாகவும் , நல்ல பிள்ளையாகவும் இருந்துவிடுவாள். கல்லூரியில் யாரிடமும் ஏதும் சொல்லவில்லையாதலால் இது முக்கியமாகவே இருந்தது. கல்லூரில் சமத்து குட்டியாக இருக்கும் அவள், வீட்டில் அவள் அப்பா முன் செய்யும் அட்டூழியங்கள் அளவில் அடங்காதது. நிச்சயமாக அவளுக்கு தெரியும், உள்ளே பொண்ணு பிள்ளைதான் என்று.
காலையில் எழுந்து அன்றைக்கு அம்மா அவளுக்கு என்ன சாப்பிட தரப்போகிறாள், என்பதில் ஆரம்பித்து அம்மா என்ன உடை உடுத்திகொண்டிருகிறாள் என்பதாய் போய் .. பாட்டி என்ன சமைத்து தருவார்கள் என்பது வரை உரையாடல் நடக்கும். பெரும்பாலும் விக்னேஷ் இரவில் அதிக நேரம் கழித்து உறங்குவதலும், காலையில் நேரம் கழித்து விழிப்பதாலும் இருவருக்கும் இடையில் அவன் வருவதே இல்லை.
அப்படி இப்படி என சின்ன குட்டி பட்டாணி அளவில் இருந்து ஒரு பட்டாணி பட்டை அளவிற்கு வளர்ந்துவிட்டாள். கூகிள் சொல்லியது. மீண்டும் அந்த குளிரூட்டப்பட்ட பதற்றமான அறைக்குள் பிரவேசிக்க வேண்டும். ஆனாலும் இந்த எல்லா பதற்றத்தையும் அந்த “டோக்,டோக், டோக்,” சத்தம் சரி செய்துவிடும்.
ஆனாலும் விக்னேஷிற்கு அவனை அந்த அறைக்குள் விடாதது பெரிய வருத்தம் தான். என்ன செய்வது, விதிமுறைகள் அப்படி. அன்றைய காலை பொழுதில் உணவெல்லாம் முடித்துவிட்டு காரில் ஏறி வழியெங்கும் தான் காணும் விசயங்களின் அழகை சின்ன குட்டியிடம் சொல்லிக்கொண்டே வந்தாள் ராஜீ. அது அவளுக்கு கேட்பதற்காக மட்டும் அல்ல, வேறு ஏதும் யோசித்து மனதை பதற்றம் அடைய செய்யாமல் இருக்க அவளுக்கு அவளே செய்து கொள்ளும் முயற்சி.
இன்று என்ன சொல்வார்களோ? கிட்டத்தட்ட பல வருடங்களாக வீட்டில் யாரும் பிள்ளை பெற்றுக்கொள்ளததால் இதை எப்படி கையாள்வது என்பதில் ஒரு குழப்பம் இருந்தது. அந்த பெரிய கட்டிடத்தை தூரத்தில் பார்த்தே ,, என்னவோ செய்தது. மருந்துகள் எல்லாம் சாப்பிடும் , சரியாக எல்லாம் இருக்கவேண்டுமே என்ற எண்ணம் மட்டும் குறையவே இல்லை.
முதலில் ஸ்கேன் எடுத்துவிட்டு வந்துவிடுங்கள், டாக்டர் வேறு வேளையில் இருக்கிறார், என்று செவிலியர் கூற,அவர்கள் சென்று அந்த பெரிய கூட்டத்தில் ஐக்கியம் ஆனார்கள். அதிசயமாக அமர்ந்த சில நிமிடங்களிலேயே “ராஜீ” என்று ஒருவர் அழைக்க,, ராஜியும் எழ முயல,,, அவளுக்கு முன்னே வேறு ராஜீ நடந்துக்கொண்டிருந்தாள். “நீங்க இல்ல மேடம் , அவங்க என்று உதவியாளரும் சொல்லிவிட்டு அந்த ராஜீயை உள்ளே வரசொன்னாள்”. எத்துணை குழப்பம். சரி வேடிக்கை பார்போம் என்று நேரத்தை கடத்தினர் இருவரும்.
ஒரு வழியாக அன்றைக்கும் அதே அறையில், அதே “டோக், டோக்”கை கேட்டு , ஸ்கேன் முடித்து பாலாவையும் சந்தித்து பேசிவிட்டு அதே மருந்துகள் தொடர சொல்லி கேட்டுவிட்டு வீடு வந்தனர்.
இன்னும் விக்னேஷின் பெற்றோரோடு ஏதும் கூறவில்லை. மூன்று மாதங்கள் கடந்துவிட்டோம்,, சொல்லிவிடுவோம் என்று, தொலைபேசியில் அழைத்து நமக்கு பேச தெரிந்த மொழியிலும், வார்த்தைகள் தேடும் காலம் வரலாம் என்பது போல, என்ன சொல்வதென்று தெரியாது ,, ஒரு வழியாக சொல்லி முடித்தனர் இருவரும். சின்ன குட்டி வரப்போகிறாள் என....

Thursday, 3 January 2019

தொடுவானம் .....


விக்னேஷும் , ராஜீயும் கூறியதை நம்ப முடியாமலும், ஆச்சர்யத்திலும் டாக்டர் பாலா அமர்ந்திருந்தார். ஆமாம் “டாக்டர்”, பாசிடிவ் தான் வந்துது... முகத்தில் அத்துணை சந்தோசத்தையும் கண்களில் கட்டி இருவரும் சத்யாவை பார்த்துக்கொண்டிருந்தனர். சரி ஒரு ஸ்கேன் பண்ணிட்டு பேசுவோம் என்றவர் ஒரு காகிதத்தில் நாற்பது ஐந்து நாட்கள் கழித்து எடுக்கவேண்டிய ஸ்கேன் பெயரை எழுதி கொடுத்தார்.

அந்த பெரிய மருத்துவமனையில் எல்லோரும் வயிற்றிலும், கையிலுமாக குழந்தைகளை சுமந்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தனர். விக்னேஷும், ராஜீயும் அவர்களை மகிழ்ச்சியோடு பார்த்து ரசித்துக்கொண்டே ஸ்கேன் அறைக்குள்  செல்ல அவர்களின் முறைக்காக காத்திருந்தனர். ஒரு வழியாக அவர்கள் அழைத்துவிட்டார்கள் .. “இங்க ராஜீ யாருங்க?” உள்ளே ஏதோ உருள பயத்துடன், மிகுந்த எதிர்பார்ப்புடன் ராஜீ அந்த அறைக்குள் நடந்தாள். தனக்குள் நடந்திருக்கும் மாற்றத்தை படம் பிடித்து காண்பிக்கப்போகிறார்கள். ஊரிலில் உள்ள எல்லா சாமியையும் துணைக்கு அழைத்துவிட்டு அந்த படுக்கையில் படுத்துக்கொண்டாள். சில பல கருவிகளின் துணைகொண்டு அந்த குட்டி கரு எங்கு உள்ளது என்பதை அந்த மருத்துவர்  ஆராய்ந்துக் கொண்டிருந்தார்.

உலகமே நிசப்தமானதாய் ஒரு பிரமை. அந்த அறையின் மேற்கூரையில் ஒரு விளக்கு பொருத்தப்பட்டிருந்தது. அவள் கோணத்தில் இருந்து, அவளுக்கு அது ஒரு சிவ லிங்கமாய் தோன்ற, அப்படியே மனதோடு ஒரு முறை வேகமாய் சிவபுராணம் சொல்ல ஆரம்பித்திருந்தாள். திடீரென அந்த அறையின் நிசப்தத்தை போக்கி ஒரு சத்தம் ...”டோக், டோக், டோக்” என்று தொடர்ந்து , மீண்டும் மீண்டும் ஒலித்தது.
இத்தனை நிமிட மௌனத்தின் வெளிப்பாடாய் அது தெரிந்தது. அந்த மருத்துவர் ஏதாவது சொல்லுவாரா? என்று அவரின் முகத்தையே பார்த்துக்கிடந்தாள் .. ஆனால் அந்த முகத்தில் எதையும் அறிந்துக்கொள்ள முடியவில்லை. “ரிப்போர்ட் கொஞ்சம் நேரத்துல வந்துடும்”, வெளிய வெயிட் பண்ணுங்க ... என்று கூறி அந்த அறையில் இருந்து அனுப்பிவிட்டனர் .

ஆர்வமாக என்ன ஆச்சு? என்ற கேட்ட விக்னேஷிடம் ,,, தெரில அவங்க ஒண்ணுமே சொல்லல ,,, என்று கூறி மீண்டும் மருத்துவர் என்ன சொல்லுவாரோ என்ற பதற்றத்தில் அமர்ந்திருந்தாள்.
ஒவ்வொரு நிமிடமும் இல்லை, நொடியும் யுகங்களாய் கழிந்தது அன்று. கையில் வாங்கிய ரிப்போர்டை பிரித்து பார்க்கவும் பயம் கொண்டு... அப்படியே மருத்துவர் பாலாவை பார்க்க காத்திருந்தனர்.
கூட்டம் எல்லாம் குறைந்து அவர்களின் முறை வந்ததும் , ரிப்போர்டுடன் உள்ளே நுழைந்தனர். பிரித்து பார்த்துவிட்டு எல்லாம் நன்றாக உள்ளது ,, வாழ்த்துகள் ,,, என்று அவர் கூறிய அந்த ஒரு நிமிடத்தில் உலகின் எல்லா நிலைகளையும் கடந்து விட்ட மனநிலையில் அவர்கள் இருவரும் இருந்தனர். பிறகு அவர் கூறிய அனைத்தும் சம்பர்தாய வார்த்தைகளாகவே தெரிந்தது.

ஆம் ,,, அவர்களின் வாழ்க்கையில் அவள் வந்துவிட்டாள் .. என்னவோ ராஜிக்கு தனக்குள் ஒரு பெண் குழந்தையே உருவாகி இருக்கிறாள் என்று தோன்றியது ... அந்த நாள் முதல் அவர்களின் வாழ்க்கைக்குள் அவளும், அவளின் வாழ்க்கைக்குள் அவர்களும் புகுந்துவிட்டார்கள்....
காலையில், மாலையில், இரவில் என்று எப்போதும் அவளோடு , அவளுக்காய் அவர்களின் வாழ்க்கை சுழன்றது .....